5th Standard Tamil Term 1 Chapter 2 Supplementary: Varumayilum Nermai (Honesty in Poverty)

5 ஆம் வகுப்பு தமிழ் - வறுமையிலும் நேர்மை

5 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 2 : கல்வி

துணைப்பாடம் : வறுமையிலும் நேர்மை

5 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 2 : கல்வி : துணைப்பாடம் : வறுமையிலும் நேர்மை | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்
இயல் இரண்டு துணைப்பாடம் வறுமையிலும் நேர்மை 5th Tamil Lesson Image 1

ஓர் ஊரில் தொடர்ந்து சில ஆண்டுகளாக மழையே பெய்யாததால், அந்த ஊரில் கடும் பஞ்சம் நிலவியது. மக்கள் பசியால் வாடினர். நல்ல உள்ளம் படைத்த பணக்காரர் ஒருவரிடம் அந்த ஊர் மக்கள் சென்று, தங்களின் குழந்தைகளுக்கு உதவி செய்யுமாறு வேண்டினர்.

இளகிய உள்ளம் கொண்ட அவர், இந்த ஊரில் குழந்தைகள் யாரும் பசியால் வாட வேண்டா. ஆளுக்கொரு கொழுக்கட்டை கிடைக்குமாறு செய்கிறேன். என் வீட்டிற்கு வந்து கொழுக்கட்டையை எடுத்துச் செல்லச் சொல்லுங்கள் என்றார். மாளிகைக்குத் திரும்பிய அவர், தம் வேலைக்காரர்களை அழைத்தார். இந்த ஊரில் உள்ள குழந்தைகளின் எண்ணிக்கையைக் கணக்கெடுத்துக் கொள்ளுங்கள். ஆளுக்கொரு கொழுக்கட்டை கிடைக்க வேண்டும். நாளையிலிருந்து கொழுக்கட்டைகளைக் கூடையில் சரியான எண்ணிக்கையில் வைத்துக்கொண்டு வீட்டிற்கு வெளியே இருக்க வேண்டும் என்றார்.

அதுபோலவே வேலைக்காரர்கள் செய்தனர். அங்கே காத்திருந்த சிறுவர் சிறுமியர் அவர்களைச் சூழ்ந்து கொண்டனர். வேலைக்காரர்கள் கூடையினை அவர்கள் முன் வைத்தனர்.

சிறு சிறு கதைகளை உரிய ஒலிப்புடன் பொருள் விளங்கப் படித்தல்

5th Tamil Lesson Image 2

கொழுக்கட்டையை எடுப்பதில் ஒவ்வொருவரும் போட்டி போட்டனர். ஆனால் ஒரே ஒரு சிறுமி மட்டும் அமைதியாக இருந்தாள். எல்லாரும் எடுத்துச் சென்றது போக மீதி இருந்த சிறிய கொழுக்கட்டையை எடுத்துக் கொண்டு அங்கிருந்து மகிழ்ச்சியுடன் சென்றாள் அவள். எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்தார் பணக்காரர்.

ஐந்தாம் நாளும் அப்படியே நடந்தது. எஞ்சியிருந்த சிறிய கொழுக்கட்டையை எடுத்துக் கொண்டு புறப்பட்ட அந்தச் சிறுமி, தன் வீட்டிற்கு வந்தாள். அந்தக் கொழுக்கட்டையைச் சாப்பிடுவதற்காக இரண்டாகப் பிட்டாள். அப்போது அதன் உள்ளிருந்து ஒரு தங்கக்காசு கீழே விழுந்தது. அந்தத் தங்கக் காசைத் தன் தாயிடம் காட்டி, "அம்மா! இது கொழுக்கட்டைக்குள் இருந்தது; இது என்ன என்று பாருங்கள்" என்றாள் அச்சிறுமி. அதற்கு அவர், "இது தங்கக் காசு" என்று இளவேனிலிடம் கூறிவிட்டு, இது எப்படி கொழுக்கட்டைக்குள் வந்திருக்கும் என்று யோசித்தவாறே, "இந்தக் கொழுக்கட்டையை யார் கொடுத்தார்களோ அவர்களிடமே சென்று கொடுத்துவிடு" என்றார்.

5th Tamil Lesson Image 3

"அந்தத் தங்கக்காசை எடுத்துக் கொண்டு பணக்காரரின் வீட்டிற்கு வந்தாள் சிறுமி. "ஐயா! நான் எடுத்துச் சென்ற கொழுக்கட்டைக்குள் இந்தத் தங்கக் காசு இருந்தது, பெற்றுக் கொள்ளுங்கள்" என்றாள்.

"மகளே உன் பெயர் என்ன?" எனக் கேட்டார் பணக்காரர். தன் பெயர் இளவேனில் எனக் கூறினாள் அந்தச் சிறுமி.

"மகளே, உன் நேர்மைக்கும் பொறுமைக்கும் நல்ல பண்புகளுக்கும் நான் அளித்த பரிசே இந்தத் தங்கக்காசு. மகிழ்ச்சியுடன் இதை எடுத்துக்கொண்டு வீட்டிற்குச் செல்" என்றார் பணக்காரர்.

5th Tamil Lesson Image 4

"நன்றி, ஐயா!" எனக் கூறிவிட்டு, துள்ளிக் குதித்தபடி ஓடிவந்த அவள், நடந்ததைத் தன் தாயிடம் சொன்னாள். அதனைக் கேட்டு அந்தத் தாயும் மகிழ்ச்சியடைந்தாள்.

நீதி : 'நேர்மை நன்மை தரும்’