6 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 1 : கண்ணெனத் தகும்
கவிதைப்பேழை: மூதுரை
நுழையும்முன்
கல்விக்கு எல்லை இல்லை. மனிதன் பிறந்தது முதல் இறுதிவரை கற்றுக்கொண்டே இருக்கிறான். கல்வி மனிதனை உயர்த்துகிறது. கல்வியும் செல்வமாகக் கருதத் தக்கது. அது பிறருக்குத் தந்தாலும் குறையாமல் வளரும். கல்வியைப் பிறரால் கைப்பற்றவோ அழிக்கவோ முடியாது. அழியாச் செல்வமாகிய கல்வியைக் கற்றவன் எங்கும் எப்போதும் சிறப்புப் பெறுவான். எனவே, நாமும் கற்போம்; வளம்பெறுவோம்.
மன்னனின் கற்றோன் சிறப்புடையன் - மன்னற்குத்
தன்தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.*
- ஒளவையார்
மன்னனையும் குற்றம் இல்லாமல் கற்றவரையும் ஒப்பிட்டு ஆராய்ந்து பார்த்தால் மன்னனைவிடக் கற்றவரே சிறந்தவர். மன்னனுக்குத் தன் நாட்டில் மட்டுமே சிறப்பு. கல்வி கற்றவர்க்குச் சென்ற இடங்களில் எல்லாம் சிறப்பு.
நூல் வெளி
இந்நூலின் ஆசிரியர் ஒளவையார். இவர் (i) ஆத்திசூடி, (ii) கொன்றை வேந்தன், (iii) நல்வழி போன்ற நூல்களையும் இயற்றியுள்ளார்.
மூதுரை என்னும் சொல்லுக்கு மூத்தோர் கூறும் அறிவுரை என்பது பொருள். சிறந்த அறிவுரைகளைக் கூறுவதால் இந்நூல் மூதுரை எனப் பெயர் பெற்றது. இந்நூலில் முப்பத்தொரு பாடல்கள் உள்ளன.