6th Standard Tamil Term 1 Unit 1 | ValarTamil Prose Lesson Guide

6th Tamil Term 1 Chapter 1 Valar Tamil Prose

6 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 1 : தமிழ்த்தேன்

உரைநடை: வளர்தமிழ்

6 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 1 : தமிழ்த்தேன் : உரைநடை: வளர்தமிழ் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

இயல் ஒன்று

உரைநடை உலகம்

வளர்தமிழ்

6th Tamil Unit 1 Banner
நுழையும்முன்

மூத்த தமிழ்மொழி என்றும் இளமையானது, எளிமையானது; இனிமையானது, வளமையானது; காலத்திற்கேற்பத் தன்னைத் தகுதிப்படுத்திக்கொள்வது; நினைக்கும்போதே நெஞ்சில் இனிப்பது; நம் வாழ்வைச் செழிக்கச் செய்வது; உலகச் செம்மொழிகளுள் ஒன்றாக விளங்கும் தமிழ்மொழியின் சிறப்புகளை அறியலாம் வாருங்கள்.

மனித இனப் பரிணாம வளர்ச்சியின் சிறப்புகளுள் ஒன்று மொழி. மனிதரைப் பிற உயிரினங்களிடம் இருந்து வேறுபடுத்தியும் மேம்படுத்தியும் காட்டுவது மொழி, மொழி, நாம் சிந்திக்க உதவுகிறது; சிந்தித்ததை வெளிப்படுத்தவும் உதவுகிறது. பிறர் கருத்தை நாம் அறிய உதவுவதும் மொழியே. உலகில் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட மொழிகள் உள்ளன. இவற்றுள் சில மொழிகள் மட்டுமே பேச்சு வடிவம், எழுத்து வடிவம் ஆகிய இரண்டையும் பெற்றுள்ளன.

உலக மொழிகள் பலவற்றுள் இலக்கண, இலக்கியவளம் பெற்றுத் திகழும் மொழிகள் மிகச்சிலவே. அவற்றுள் செம்மை மிக்க மொழி என ஏற்றுக் கொள்ளப்பட்டவை சில மொழிகளே. தமிழ்மொழி அத்தகு சிறப்பு மிக்க செம்மொழியாகும்.

தமிழ் இலக்கியங்கள் இனிமையானவை. ஓசை இனிமை, சொல் இனிமை, பொருள் இனிமை கொண்டவை. பல மொழிகள் கற்ற கவிஞர் பாரதியார்,

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல்
இனிதாவது எங்கும் காணோம்

என்று தமிழ்மொழியின் இனிமையை வியந்து பாடுகிறார்.

மூத்தமொழி

என்று பிறந்தவள் என்று உணராத
இயல்பினளாம் எங்கள் தாய்!

என்று பாரதத்தாயின் தொன்மையைப் பற்றிப் பாரதியார் கூறிய கருத்து தமிழ்த்தாய்க்கும் பொருந்துவதாக உள்ளது.

Bharathiyar Image

சாலைகள் தோன்றிய பிறகே சாலை விதிகள் தோன்றியிருக்கும். அதுபோல இலக்கியம் தோன்றிய பிறகே அதற்குரிய இலக்கண விதிகள் தோன்றியிருக்க வேண்டும். தொல்காப்பியம் தமிழில் நமக்குக் கிடைத்துள்ள மிகப் பழைமையான இலக்கண நூல் ஆகும். அப்படி என்றால் அதற்கும் முன்னதாகவே தமிழில் இலக்கிய நூல்கள் இருந்திருக்க வேண்டும். அல்லவா? இதனைக் கொண்டு தமிழ் மிகவும் தொன்மையான மொழி என்பதை உணரலாம்.

Ancient Tamil Palm Manuscripts

எளிய மொழி

தமிழ்மொழி பேசவும் படிக்கவும் எழுதவும் உகந்த மொழி. உயிரும் மெய்யும் இணைவதால் தோன்றுபவை உயிர்மெய் எழுத்துகள். உயிர் எழுத்துகள், மெய் எழுத்துகள் ஆகியவற்றின் ஒலிப்பு முறைகளை அறிந்து கொண்டால் உயிர்மெய் எழுத்துகளை எளிதாக ஒலிக்கலாம். எழுத்துகளைக் கூட்டி ஒலித்தாலே தமிழ் படித்தல் இயல்பாக நிகழ்ந்துவிடும்.

(எ.கா.) அ + மு + து = அமுது.

தமிழ்மொழியை எழுதும் முறையும் மிக எளிதுதான். இதற்கேற்ப, தமிழ் எழுத்துகள் பெரும்பாலும் வலஞ்சுழி எழுத்துகளாகவே அமைந்துள்ளன.

(எ.கா.) வலஞ்சுழி எழுத்துகள் – அ, எ, ஒள, ண, ஞ

இடஞ்சுழி எழுத்துகள் - ட, ய, ழ

தெரிந்து தெளிவோம்.
Know and Clear Table

சீர்மை மொழி

சீர்மை என்பது ஒழுங்கு முறையைக் குறிக்கும் சொல். தமிழ் மொழியின் பலவகைச் சீர்மைகளுன் அதன் சொற்சிறப்பு குறிப்பிடத்தக்கது.

உயர்திணை, அஃறிணை என இருவகைத் திணைகளை அறிவோம். உயர்திணையின் எதிர்ச்சொல் தாழ்திணை என அமையவேண்டும். ஆனால் தாழ்திணை என்று கூறாமல் அஃறிணை (அல் + திணை = உயர்வு அல்லாத திணை) என்று பெயர் இட்டனர் நம் முன்னோர்.

பாகற்காய் கசப்புச்சுவை உடையது. அதனை கசப்புக்காய் என்று கூறாமல், இனிப்பு அல்லாத காய் பாகற்காய் (பாகு + அல் + காய்) என வழங்கினர். இவ்வாறு பெயரிடுவதிலும் சீர்மை மிக்கது தமிழ் மொழி.

வளமை மொழி

தமிழ் வளமைமிக்க மொழி. தொல்காப்பியம், நன்னூல் உள்ளிட்ட இலக்கண நூல்கள் மிகுந்தது தமிழ் மொழி. எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகிய சங்க இலக்கியங்களைக் கொண்டது; திருக்குறள், நாலடியார் முதலிய அறநூல்கள் பலவும் நிறைந்தது; சிலப்பதிகாரம், மணிமேகலை முதலிய காப்பியங்களைக் கொண்டது. இவ்வாறு இலக்கிய, இலக்கண வளம் நிறைந்தது தமிழ் மொழி.

Grammar richness diagram

தமிழ் மொழி சொல்வனம் மிக்கது. ஒரு பொருளின் பல நிலைகளுக்கும் வெவ்வேறு பெயர் சூட்டுவது தமிழ் மொழியின் சிறப்பாகும். சான்றாக, பூவின் ஏழுநிலைகளுக்கும் தோன்றுவது முதல் உதிர்வது வரை தனித்தனிப் பெயர்கள்தமிழில் உண்டு.

ஓர் எழுத்தே ஒரு சொல்லாகிப் பொருள்தருவதும் உண்டு. ஒரு சொல் பல பொருளைக் குறித்து வருவதும் உண்டு. சான்றாக 'மா'- என்னும் ஒரு சொல் மரம், விலங்கு, பெரிய, திருமகள், அழகு, அறிவு, அளவு, அழைத்தல், துகள், மேன்மை, வயல், வண்டு போன்ற பல பொருள்களைத் தருகிறது.

வளர்மொழி

தமிழுக்கு முத்தமிழ் என்னும் சிறப்புப் பெயரும் உண்டு. இயல்தமிழ் எண்ணத்தை வெளிப்படுத்தும்; இசைத்தமிழ் உள்ளத்தை மகிழ்விக்கும்; நாடகத்தமிழ் உணர்வில் கலந்து வாழ்வின் நிறைகுறைகளைச் சுட்டிக்காட்டும்.

தமிழில் காலந்தோறும் பல வகையான இலக்கிய வடிவங்கள் புதிது புதிதாக உருவாகி வருகின்றன. செய்யுள், கவிதை, புதுக்கவிதை, துளிப்பா போன்றன தமிழ்க் கவிதை வடிவங்கள். கட்டுரை, புதினம், சிறுகதை போன்றன உரைநடை வடிவங்கள்.

தற்போது அறிவியல் தமிழ், கணினித்தமிழ் என்று மேலும் மேலும் வளர்ந்து கொண்டே வருகிறது.

தெரிந்து தெளிவோம்.
Growing Language Concepts

புதுமை மொழி

இன்றைய அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப தமிழில் புதிய புதிய கலைச்சொற்கள் உருவாகி வருகின்றன.

இணையம், முகநூல், புலனம், குரல்தேடல், தேடுபொறி, செயலி, தொடுதிரை முதலிய சொற்களை இதற்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம். சமூக ஊடகங்களான செய்தித்தாள், வானொலி, தொலைக்காட்சி ஆகியவற்றிலும் பயன்படத்தக்க மொழியாக விளங்குகிறது தமிழ்மொழி.

அறிவியல் தொழில்நுட்ப மொழி

உலகில் எழுத்து வடிவம் பெறாத மொழிகள் பல உள்ளன. இந்நிலையில் தமிழ் வரிவடிவ எழுத்துகள் அறிவியல் தொழில்நுட்பநோக்கிலும் பயன்படுத்தத் தக்கவையாக உள்ளன.

Tech compatibility

மொழியைப் கணினியில் பயன்படுத்த வேண்டும் என்றால் அது எண்களின் அடிப்படையில் வடிவமைக்கப்படவேண்டும். தொல்காப்பியம், நன்னூல் போன்றவை நாம் படிப்பதற்காக எழுதப்பட்டவை. ஆயினும் அவை கணினி மொழிக்கும் ஏற்ற நுட்பமான வடிவத்தையும் பெற்றுள்ளன.

தமிழ் எண்களை அறிவோம்.
Tamil Numbers Table

மூத்த மொழியான தமிழ் - கணினி, இணையம் போன்றவற்றில் பயன்படத்தக்க வகையில் புது மொழியாகவும் திகழ்கிறது. இத்தகு சிறப்புமிக்க மொழியைக் கற்பது நமக்குப் பெருமையல்லவா? தமிழ் மொழியின் வளமைக்கும் வளர்ச்சிக்கும் பங்காற்றவேண்டியது நமது கடமையல்லவா?

Conclusion image

இரண்டாயிரம் ஆண்டுகளாக வழக்கில் இருக்கும் சில தமிழ்ச் சொற்கள்.

Ancient Tamil words list
Tags: Term 1 Chapter 1 | 6th Tamil பருவம் 1 இயல் 1 | 6 ஆம் வகுப்பு தமிழ்.

6th Tamil : Term 1 Chapter 1 : Tamilthean : Prose: ValarTamil Term 1 Chapter 1 | 6th Tamil in Tamil : 6th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 6 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 1 : தமிழ்த்தேன் : உரைநடை: வளர்தமிழ் - பருவம் 1 இயல் 1 | 6 ஆம் வகுப்பு தமிழ் : 6 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.