6th Standard Tamil Term 2 Chapter 1 Grammar: Ina Eluthukal Questions and Answers

6th Tamil Term 2 Chapter 1 Grammar: Ina Eluthukal Questions and Answers
பருவம் 2 இயல் 1 | 6 ஆம் வகுப்பு தமிழ் - இலக்கணம்: இன எழுத்துகள்: கேள்விகள் மற்றும் பதில்கள் | 6th Tamil : Term 2 Chapter 1 : Kanena thakum

6 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 1 : கண்ணெனத் தகும்

இலக்கணம்: இன எழுத்துகள்: கேள்விகள் மற்றும் பதில்கள்

6 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 1 : கண்ணெனத் தகும் : இலக்கணம்: இன எழுத்துகள்: கேள்விகள் மற்றும் பதில்கள்: புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. மெல்லினத்திற்கான இன எழுத்து இடம்பெறாத சொல் எது?
அ) மஞ்சள்
ஆ) வந்தான்
இ) கல்வி
ஈ) தம்பி
[விடை : இ) கல்வி]
2. தவறான சொல்லை வட்டமிடுக.
அ) கண்டான்
ஆ) வென்ரான்
இ) நண்டு
ஈ) வண்டு
[விடை : ஆ) வென்ரான்]
பின்வரும் சொற்களைத் திருத்தி எழுதுக.
பிழை - திருத்தம்
தென்றல் – தென்றல்
கன்டம் – கண்டம்
நன்ரி – நன்றி
மன்டபம் – மண்டபம்
குறுவினா
இன எழுத்துகள் என்றால் என்ன?
விடை:
சில எழுத்துகளுக்கு இடையே ஒலிக்கும் முயற்சி, பிறக்கும் இடம் ஆகியவற்றில் ஒற்றுமை உள்ள எழுத்துகள் இன எழுத்துகள் எனப்படும்.
(i) வல்லின மெய்களுக்கு மெல்லின மெய்கள் இனம். இடையின எழுத்துகள் ஆறும் ஒரே இனம்.
(ii) உயிர்க்குறிலுக்கு உயிர்நெடிலும் உயிர் நெடிலுக்கு உயிர்க் குறிலும் இனம்.
(iii) ‘ஐ’ என்னும் எழுத்துக்கு ‘இ’ என்ற எழுத்து இனம். ‘ஔ’ என்னும் எழுத்துக்கு ‘உ’ என்ற எழுத்து இனம்.

மொழியை ஆள்வோம்!

Tamil Learning Icon
படித்துச் சுவைக்க
யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையும் கல்லாத வாறு.
- குறள் எண்: 397

ஆற்றவும் கற்றார் அறிவுடையார் அஃதுடையார்
நாற்றிசையும் செல்லாத நாடுஇல்லை-அந்நாடு
வேற்றுநாடு ஆகா தமவேஆம் ஆயினால்
ஆற்றுணா வேண்டுவது இல்.
- பழமொழி நானூறு : 4
தொடர்களை நீட்டித்துப் புதிய தொடர்களை உருவாக்குங்கள்.
(எ.கா.)
பாடம் படித்தான்.
வகுப்பில் பாடம் படித்தான்.
தமிழ் வகுப்பில் பாடம் படித்தான்.
நேற்று தமிழ் வகுப்பில் பாடம் படித்தான்.
அவன் நேற்று தமிழ் வகுப்பில் பாடம் படித்தான்.
மழை பெய்தது.
விடை :
(i) புயல் மழை பெய்தது.
(ii) தொடர்ந்து புயல் மழை பெய்தது.
(iii) நேற்று தொடர்ந்து புயல் மழை பெய்தது.
(iv) சென்னையில் நேற்று தொடர்ந்து புயல் மழை பெய்தது.
இரு பொருள் தரக்கூடிய சொற்களைப் பயன்படுத்திச் சொற்றொடர்கள் அமையுங்கள்.
(நூல், மாலை, ஆறு, படி)
(எ.கா.) ஆடை தைக்க உதவுவது நூல்
மூதுரை அற நூல்
விடை :
1. மாலை
– திருமாலுக்கு அணிவிப்பது துளசி மாலை.
மாலை வெயில் உடலுக்கு நல்லது.
2. ஆறு
– சுவைகள் மொத்தம் ஆறு.
வைகையாற்றின் துணையாறுகளுள் ஒன்று மஞ்சளாறு.
3. படி
– நூலை எடுத்துப் படி.
மேலே ஏறுவதற்குப் பயன்படுவது படி.
பின்வரும் சொற்களைப் பயன்படுத்திச் சொற்றொடர்களை உருவாக்குங்கள்.
Sentence Formation
விடை
(i) ஆசிரியர் கவிதை எழுதுகிறார்.
(ii) மாணவன் கவிதை எழுதுகிறான்.
(iii) ஆசிரியர் பாடம் படிக்கிறார்.
(iv) மாணவன் பாடம் படிக்கிறான்.
(v) ஆசிரியர் பாடம் கற்பிக்கிறார்.
உரையாடலை நிறைவு செய்யுங்கள்.
மாணவர் : வணக்கம் ஐயா, தலைமை
ஆசிரியர் : வணக்கம் மதி உனக்கு என்ன வேண்டும்?
மாணவர் : எனக்கு மாற்றுச் சான்றிதழ் வேண்டும் ஐயா.
தலைமை ஆசிரியர் : எற்காக மாற்றுச் சான்றிதழ் வேண்டும்?
மாணவர் : என் தந்தைக்குப் பணி மாறுதல் கிடைத்திருக்கிறது ஐயா.
தலைமை ஆசிரியர் : அப்படியா! எந்த ஊருக்குப் பணி மாறுதல் கிடைத்திருக்கிறது?
மாணவர் : மதுரைக்குப் பணி மாறுதல் கிடைத்திருக்கிறது.
தலைமை ஆசிரியர் : அங்கு எந்தப் பள்ளியில் சேரப் போகிறாய்?
மாணவர் : அங்கு அரசுப் பள்ளியில் சேரப் போகிறேன்.
தலைமை ஆசிரியர் : நீ யாரை அழைத்து வந்துள்ளாய்?
மாணவர் : என் அப்பாவை அழைத்து வந்திருக்கிறேன் ஐயா.
கீழே கொடுக்கப்பட்டுள்ள தலைவர்களின் பிறந்த நாள் எந்த நாளாகக் கொண்டாடப்படுகிறது.
(குழந்தைகள் நாள், மாணவர் நாள், ஆசிரியர் நாள், தேசிய இளைஞர் நாள், கல்வி வளர்ச்சி நாள்)
1. காமராசர் பிறந்த நாள் கல்வி வளர்ச்சி நாள்
2. டாக்டர் எஸ். இராதாகிருஷ்ணன் பிறந்தநாள் ஆசிரியர் நாள்
3. அப்துல்கலாம் பிறந்த நாள் மாணவர் நாள்
4. விவேகானந்தர் பிறந்த நாள் தேசிய இளைஞர் நாள்
5. ஜவஹர்லால் நேரு பிறந்த நாள் குழந்தைகள் நாள்
இன எழுத்துகள் அமைந்துள்ள சொற்களை வட்டமிடுங்கள்.

கங்கை, பக்கம், வண்டு, மண்டபம், மங்கை,
வெந்தயம், தந்தம், பஞ்சு, பச்சை, தக்காளி, மஞ்சள்,
கம்பனம், குன்று, காக்கை, செங்கடல், தேங்காய்

Ina Eluthukal Circle
கீழ்க்காணும் சொற்களுள் அமைந்துள்ள இன எழுத்துகளை எடுத்து எழுதுங்கள்.

சங்கு, நுங்கு, பிஞ்சு, வஞ்சம், பண்டம், சுண்டல், வண்டி, பந்தயம், பத்து, கற்கண்டு, தென்றல், நன்று

விடை
1. சங்கு – ங்கு
2. நுங்கு – ங்கு
3. பிஞ்சு – ஞ்சு
4. வஞ்சம் – ஞ்ச
5. பட்டணம் – ட்ட
6. சுண்டல் – ண்ட
7. வண்டி – ண்டி
8. பந்தயம் – ந்த
9. பந்து – ந்து
10. கற்கண்டு – ண்டு
11. தென்றல் – ன்ற
12. நன்று – ன்று
பின்வரும் பத்தியைப் படித்து வினாவிற்கேற்ற விடையளிக்கவும்.

காமராசரின் வீட்டுக்குள் ஒரு சிறுவனும் அவனுடைய தங்கையும் நுழைய முயன்றனர். ஊழியர் அவர்களைத் தடுப்பதைக் காமராசர் கவனித்தார். உடனே அவர்களை உள்ளே அழைத்தார். "யாரைப் பார்க்க வந்தீங்க?" என்று அன்புடன் வினவினார். "எங்க அண்ணனுக்குத் தேர்வுக்குப் பணம் கட்ட அம்மாவிடம் வசதியில்லே. உங்களைப் பார்த்தால்..." என்று சிறுமி கூறி முடிப்பதற்குள், "அம்மா அனுப்பி விட்டாரா?" என்று காமராசர் கேட்டார். "இல்லை நாங்களாகத்தான் வந்தோம். அம்மா அப்பளம் போட்டு வீடு வீடாகக் கொண்டு போய் வித்துட்டு வருவாங்க. அதில் வரும் வருமானத்தை வச்சுத்தான் எங்களைப் படிக்க வைக்கிறாங்க" என்று குழந்தைகள் கூறினர். அதனைக் கேட்டதும் மாடியேறிச் சென்று பணத்தைக் கொண்டு வந்து கொடுத்தார்.

மறுநாள் குழந்தைகள் இருவரும் காமராசரைத் தேடி வந்தனர். "ஐயா தேர்வுக்குப் பணம் கட்டியாச்சு. இந்த இரசிதை (பற்றுச் சீட்டை) அம்மா உங்களிடம் காட்டிட்டு வரச் சொன்னாங்க' என்றனர். அதனைக் கேட்டுக் காமராசர் மனம் நெகிழ்ந்தார்.

1. காமராசரின் வீட்டிற்குள் நுழைய முயன்றவர்கள்
அ) பெற்றோர்
ஆ) சிறுவன், சிறுமி
இ) மக்கள்
ஈ) ஆசிரியர்கள்
விடை : ஆ) சிறுவன், சிறுமி
2. இந்நிகழ்வு சிறுவனது குடும்பத்தின் எப்பண்பை விளக்குகிறது?
அ) ஏழ்மை
ஆ) நேர்மை
இ) உழைப்பு
ஈ) கல்லாமை
விடை : ஆ) நேர்மை
3. மறுநாள் குழந்தைகள் வந்ததும் காமராசர் மனம் நெகிழ்ந்தார்
4. சிறுவனும் சிறுமியும் எதற்காகக் காமராசரின் வீட்டிற்கு வந்தனர்?
விடை
சிறுவனும் சிறுமியும் தன் அண்ணனுக்குத் தேர்வுக்குக் கட்டணம் கட்டுவதற்குப் பணம் இல்லாததால் பண உதவி கேட்டு காமராசரின் வீட்டிற்கு வந்தனர்.
5. காமராசர் செய்த உதவி யாது?
விடை
காமராசர் ஏழை மாணவன் ஒருவனுக்குத் தேர்வுக்குக் கட்ட வேண்டிய பணத்தைக் கொடுத்து உதவினார்.
கட்டுரை எழுதுக
காமராசர் என்னும் தலைப்பில் கீழ்க்காணும் குறிப்புகளைக் கொண்டு கட்டுரை எழுதுக.

முன்னுரை, இளமைக் காலம், கல்விப் பணி, நிறைவேற்றிய பிற திட்டங்கள், முடிவுரை

விடை
முன்னுரை :
காமராசர் விருதுநகரில் 1903 ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதி பிறந்தார். அவருடைய பெற்றோர் குமாரசாமி நாடார் மற்றும் சிவகாமி அம்மாள் ஆவர். அவருக்குக் குலதெய்வமான காமாட்சியின் பெயர் சூட்டப்பட்டது. அவருடைய தாயார் ‘ராசா’ என்று அழைத்தார். நாளடைவில் காமாட்சி என்ற பெயர் மாறி ‘காமராசு’ என்று ஆனது.

இளமைக்காலம் :
காமராசர் தனது பள்ளிப் படிப்பைச் சத்ரிய வித்யா சாலா பள்ளியில் தொடங்கினார். அவருக்கு ஆறு வயதிருக்கும் பொழுது அவருடைய தந்தை இறந்ததால் அவரின் தாயாரின் நகைகளை விற்றுக் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தன்னுடைய பள்ளிப் படிப்பைத் தொடர முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டதால் தன்னுடைய மாமாவின் துணிக்கடையில் வேலைக்குச் சேர்ந்தார்.

கல்விப் பணிகள் :
காமராசர் காலத்தில் கட்டாயக் கல்வி நடைமுறைப்படுத்தப்பட்டது. பள்ளி வேலைநாள்களை நூற்றெண்பதிலிருந்து இருநூறாக உயர்த்தினார். தொடக்கப் பள்ளிகளில் மதிய உணவுத் திட்டம் இவரால் தொடங்கப்பட்டது. பள்ளிச் சீரமைப்பு மாநாடுகள் நடத்தப்பட்டு, பள்ளிகளுக்கான அடிப்படைப் பொருள்களும் கருவிகளும் பெறப்பட்டன. உயர்நிலைப் பள்ளி வரை இலவசக் கல்வி கொண்டு வரப்பட்டது. ஒவ்வொரு மாவட்டத்திலும் தொழில்நுட்பக் கல்லூரி தொடங்கப்பட்டது. உடற்பயிற்சிக் கல்லூரிகள் திறக்கப்பட்டன. மருத்துவக் கல்லூரி முதலான தொழிற்கல்லூரிகளில் பயிலும் ஏழை மாணவர்களுக்கு வட்டியில்லாக் கடனளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

நிறைவேற்றிய பிற திட்டங்கள் :
நாட்டு முன்னேற்றம், நாட்டு மக்களின் வாழ்க்கை முன்னேற்றம், கல்வி, தொழில் வளத்துக்கு முன்னுரிமையளித்து பல திட்டங்களை நிறைவேற்றினார். அவரது ஆட்சியில் ஒன்பது முக்கிய நீர்ப்பாசனத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை பவானித் திட்டம், மேட்டூர் கால்வாய்த் திட்டம், காவேரி டெல்டா வடிகால் அபிவிருத்தி திட்டம், மணிமுத்தாறு, அமராவதி, வைகை, சாத்தனூர், கிருட்டினகிரி, ஆரணியாறு ஆகியவையாகும். தொழில் முன்னேற்றத்திற்குக் காமராசர் செய்தவை பாரத மிகு மின் நிறுவனம், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம், மணலி சென்னை சுத்திகரிப்பு நிலையம், இரயில் பெட்டி இணைப்புத் தொழிற்சாலை, நீலகிரி புகைப்படச் சுருள் தொழிற்சாலை, கிண்டி மருத்துவ சோதனைக் கருவிகள் தொழிற்சாலை, மேட்டூர் காகிதத் தொழிற்சாலை இவையனைத்தும் காமராசரால் தொடங்கப்பட்டவை ஆகும்.

முடிவுரை :
கல்விக் கண் திறந்த காமராசரின் பிறந்த நாளான ஜூலை 15 கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடப்படுகிறது. ஏழைப் பங்காளராகவும், கர்ம வீரராகவும் தன்னலமற்ற தலைவராகவும் வாழ்ந்தவரின் அடியொற்றி நாமும் நாட்டிற்கு நன்மைகள் செய்வோம்.

மொழியோடு விளையாடு

Language Game
'கல்விக்கண் திறந்த காமராசர்' இத்தொடரிலுள்ள எழுத்துகளை மட்டும் பயன்படுத்திப் புதிய சொற்களை உருவாக்குங்கள். (எ.கா.) கண்
விடை
1. கல்வி, 2. கவி, 3. கதி, 4. ராசர், 5. விண், 6. திற, 7. கா, 8. வில், 9. கல், 10. திறந்த
முறை மாறியுள்ள சொற்களைச் சரியான இடத்தில் பொருத்திச் சொற்றொடரை நிறைவு செய்க.
1. முளையிலே விளையும் தெரியும் பயிர்
விடை: விளையும் பயிர் முளையிலே தெரியும்
2. ஆக்குவோம் இல்லாமை கல்லாமையை
விடை: கல்லாமையை இல்லாமை ஆக்குவோம்.
கீழ்க்காணும் கட்டங்களில் உள்ள இன எழுத்துச் சொற்களை வட்டமிட்டுத் தனியாக எடுத்து எழுதுக.
Grid Puzzle
விடை
Grid Solution
(i) மண்டபம், (ii) பந்து, (iii) சங்கு, (iv) மஞ்சள், (v) தென்றல்
செயல் திட்டம்
காமராசர் குறித்த செய்திகள் மற்றும் புகைப்படங்களுடன் ஒரு படத்தொகுப்பு (Album) உருவாக்கவும்.
விடை
Project Task
காமராசர் நாளிதழ்களை படிக்கும்போது எந்த ஊரில் என்ன பிரச்சினை உள்ளது என்பதை உன்னிப்பாக படிப்பார். பிறகு அந்த ஊர்களுக்குச் செல்ல நேரிடும் போது, அந்த பிரச்சினை பற்றி மக்களுடன் விவாதிப்பார். காமராசருக்கு மக்களுடன் பேசுவது என்றால் கொள்ளைப் பிரியம் உண்டு. தன்னைத் தேடி எத்தனை பேர் வந்தாலும் அவர்கள் எல்லோரையும் அழைத்து பேசி விட்டுத்தான் தூங்க செல்வார். அவர் பேசும்போது சாதாரண மனிதர் போலவே பேசுவார். காமராசர் 1920-ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் உறுப்பினர் ஆனார். 1953-ல் நேருவிடம் தமக்கு இருந்த நட்பைப் பயன்படுத்தி, பாராளுமன்றத்தில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக முதல் சட்டத் திருத்தம் கொண்டு வந்தவர் பெருந்தலைவர் காமராசர் என்பது குறிப்பிடத்தக்கது.

வட இந்திய மக்கள் காமராசரை ‘காலா காந்தி’ என்று அன்போடு அழைத்தார்கள். ‘காலா காந்தி’ என்றால் ‘கறுப்பு காந்தி’ என்று பொருள். சட்டசபையில் சமர்ப்பிக்கப்படும் வரவு-செலவு திட்டத்தை முதல் முறையாக தமிழில் சமர்ப்பித்த பெருமை காமராசரையே சேரும். 12 ஆண்டுகள் காமராசர் தமிழ்நாடு காங்கிரஸ் குழுத் தலைவராக இருந்து தமிழ்நாட்டில் காங்கிரஸ் வேரூன்றவும், காங்கிரஸ் ஆட்சி ஏற்படவும் பாடுபட்டார். காமராசர் இளம் வயதில் கொஞ்ச காலம் காப்புறுதி முகவராக இருந்தார். பின்பு அதை விட்டு விட்டார். காமராசர் புகழ் இந்தியா மட்டுமின்றி உலகமெங்கும் பரவியது. அமெரிக்காவும், ரஷ்யாவும் அவரைத் தங்கள் நாடுகளுக்கு அரசு விருந்தினராக வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தன. காமராசர் 1966-ஆம் ஆண்டு சோவியத் நாட்டுக்குச் சென்றார். கிழக்கு ஜெர்மனி, ஹங்கேரி, செக்கோஸ்லோவாக்கியா, யூகோஸ்லோவாக்கியா, பல்கேரியா போன்ற ஐரோப்பிய நாடுகளுக்கும் சென்று வந்திருக்கிறார்.

நிற்க அதற்குத் தக

Ethics Icon
என் பொறுப்புகள்
1. கல்வியின் சிறப்பை உணர்ந்துள்ளேன்.
2. தொடர்ந்து கல்வி கற்பேன்.
3. கல்வியால் எனது குறிக்கோளை அடைவேன்.
4. கல்வியால் சிறந்தவர்களை என் முன்னோடிகளாகக் கொள்வேன்.
5. புத்தகம் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வேன்.
கலைச்சொல் அறிவோம்
1. கல்வி – Education
2. தொடக்கப் பள்ளி – Primary School
3. மேல்நிலைப் பள்ளி – Higher Secondary School
4. நூலகம் – Library
5. மின்படிக்கட்டு – Escalator
6. மின்தூக்கி – Lift
7. மின்னஞ்சல் – E – Mail
8. குறுந்தகடு – Compact Disk (CD)
9. மின் நூலகம் – E – Library
10. மின்நூல் – E – Books
11. மின் இதழ்கள் – E – Magazine
Internet இணையத்தில் காண்க
1. ஔவையார் என்ற பெயரில் பலர் இருந்திருக்கின்றனர் என்ற செய்தியை இணையத்தில் தேடுக.
2. கல்வியின் சிறப்புக் குறித்துக் கூறியுள்ள கல்வியாளர் சிலரின் பெயர்களை இணையத்தில் தேடிப் பட்டியவிடுக.
3. கல்வியால் உயர்ந்தோரின் பெயர்களை இணையத்தில் தேடிப் பட்டியவிடுக.
4. கல்வியின் சிறப்பினைக் கூறும் மேற்கோள்களை இணையத்தில் தேடிப் பயில்க.
5. உலகப் புகழ்பெற்ற புத்தகத் திருவிழாக்கள் குறித்து இணையத்தில் தேடி எழுதுக.
இணையச் செயல்பாடுகள்
Activity
படிகள் :

கொடுக்கப்பட்டிருக்கும் உரலி / விரைவுக் குறியீட்டைப் பயன்படுத்தி Digital Dialects என்னும் இணையச் செயலியின் பக்கத்திற்குச் செல்லவும். அங்குக் கொடுக்கப்பட்டிருக்கும் மொழிகளில் தமிழைத் தேர்வு செய்து கொள்ளவும். இப்போது திரையில் Tamil Alphabet, Numbers, Fruit & Vegetables, Colors, Animals போன்ற தெரிவுகன் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் விரும்பும் தெரிவைத் தேர்ந்தெடுக்கவும். உதாரணமாக Aninals என்பதைத் தெரிவு செய்தவுடன் விலங்குகளின் பெயர்கள் அடங்கிய கட்டம் தோன்றும். அதன் கீழே இருக்கும் play game என்பதைச் சொடுக்கியதும் விளையாடுவதற்கான அறிவுரைக் கட்டம் தோன்றும். அதன் கீழே இருக்கும் play game என்பதை மீண்டும் சொடுக்கி விளையாட்டைத் தொடரவும்.

URL Step
செயல்பாட்டிற்கான உரலி

http://www.digitaldialects.com/

கொடுக்கப்பட்டுள்ள படங்கள் அடையாளத்திற்காக மட்டுமே

கற்பவை கற்றபின்

Learning

தங்கப் பாப்பா வந்தாளே!
சிங்கப் பொம்மை தந்தாளே!
பஞ்சு போன்ற கையாலே!
பண்டம் கொண்டு வந்தாளே!
பந்தல் முன்பு நின்றானே!
கம்பம் சுற்றி வந்தாளே!
தென்றல் காற்றும் வந்ததே!
தெவிட்டா இன்பம் தந்ததே!

இப்பாடலில் இடம்பெற்றுள்ள இன எழுத்துச் சொற்களை எடுத்து எழுதுக.
விடை
தங்க, சிங்க, பஞ்சு, பண்டம், பந்தல், கம்பம், தென்றல், வந்தாளே, நின்றாளே, வந்ததே, தந்ததே.
Tags : Term 2 Chapter 1 | 6th Tamil பருவம் 2 இயல் 1 | 6 ஆம் வகுப்பு தமிழ். 6th Tamil : Term 2 Chapter 1 : Kanena thakum : Grammar: Ina eluthukal: Questions and Answers Term 2 Chapter 1 | 6th Tamil in Tamil : 6th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 6 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 1 : கண்ணெனத் தகும் : இலக்கணம்: இன எழுத்துகள்: கேள்விகள் மற்றும் பதில்கள் - பருவம் 2 இயல் 1 | 6 ஆம் வகுப்பு தமிழ் : 6 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.